அரசு பள்ளி முன் கழிவு நீர் வாய்க்கால்
அன்னுார்; அரசு மேல்நிலைப் பள்ளி முன் தேங்கி நிற்கும் கழிவு நீரால் மாணவர்கள் தவிக்கின்றனர். அன்னுார் பேரூராட்சியில், சொக்கம்பாளையத்தில், காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.பள்ளியை ஒட்டி, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர் அரசு விடுதி செயல்படுகிறது. இங்கு கிளை நூலகம் உள்ளது. இங்கு விடுதி மற்றும் அருகில் உள்ள தனியார் நகரில் இருந்து கழிவு நீர் வெளியேறி, விடுதி முன்பும், அரசு மேல்நிலைப் பள்ளி நுழைவாயில் முன்பும் வாய்க்கால் போல் சாலையை ஒட்டி செல்கிறது.இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், 'பள்ளியின் நுழைவாயில் முன்பும், விடுதி அருகிலும், கழிவு நீர் வாய்க்கால் போல் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுகிறது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மாணவர் விடுதி மற்றும் பள்ளி முன் கழிவுநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.