மேட்டுப்பாளையம்-காரமடை பைபாஸ் சாலை விரைந்து செயல்படுத்த கையெழுத்து இயக்கம்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் - காரமடை பைபாஸ் சாலை திட்டத்தை நிறைவேற்ற, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புறவழிச் சாலை திட்ட நல சங்கத்தினர் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.மேட்டுப்பாளையம்- -- காரமடை நகரில், சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை சீர் செய்யும் வகையில் மேட்டுப்பாளையம் நகர் அருகே பைபாஸ் சாலை அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டது. பல்வேறு காரணங்களால் தமிழக அரசு, பைபாஸ் சாலை திட்டத்தை கைவிட்டது. அதனால் மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளது.தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், மேட்டுப்பாளையம், காரமடை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஊட்டிக்கு சென்று வருகின்றன. இதனால் காலை மாலை இரு நேரமும் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதை அடுத்து மேட்டுப்பாளையம், காரமடை நகரில் உடனடியாக பைபாஸ் சாலை திட்டத்தை நிறைவேற்ற, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புறவழிச்சாலை திட்ட நல சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.இந்நிகழ்ச்சிக்கு நகர மன்ற முன்னாள் தலைவர் சத்தியவதி கணேஷ் தலைமை வகித்து, கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். சமூக ஆர்வலர்கள் நடூர் கணேஷ், ராஜேந்திரன், கார்த்திக், ஷாஜகான், முன்னாள் கவுன்சிலர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவிந்தராஜ் வரவேற்றார். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பிளக்ஸ் பேனர்களில் கையெழுத்துக்களை போட்டனர்.மேலும் இந்த பிளக்ஸ் பேனருடன், 5 ஆயிரம் தபால் கார்டுகளை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கும், தமிழக முதல்வருக்கும் அனுப்புவதென முடிவு செய்யப்பட்டது.