மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும்
கோவை; 'அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும்' என, பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வியக்கத்தின் மாவட்ட கருத்தாளர் அருளானந்தம் கூறியதாவது: தமிழக அரசு பள்ளிகளில், பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களே படிக்கின்றனர். மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவங்குவது, ஜாதி சான்றிதழ் பெறுவது, ஆதார் எண் புதுப்பித்தல், உதவித்தொகைக்கான வருமான வரி சான்றிதழ் பெறுவது போன்ற அத்தியாவசிய தேவைகள் இருக்கின்றன. இச்சான்றிதழ் பெறுவதற்காக மாணவர்களும், பெற்றோர்களும் இ-சேவை மையங்களுக்கு, அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக, பள்ளிகளில் ஆண்டுக்கு ஒருமுறை சிறப்பு முகாம் நடத்த வேண்டும். இதன் வாயிலாக, மாணவர்களுக்கு தேவையான ஆவணங்கள் எளிதில் கிடைப்பதோடு, உதவித்தொகை வழங்கும் பணிகளும், தாமதமின்றி நடைபெறும். தேவையற்ற அலைச்சல் தவிர்க்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.