சிறப்பு கிராம சபை கூட்டம்
பெ.நா.பாளையம் : துடியலுார் அருகே உள்ள குருடம்பாளையம் ஊராட்சி சார்பில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.குருடம்பாளையம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், சமூக தணிக்கை ஆகியவை குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை ஒப்பிட்டு சரிபார்த்தல், பணிகளை கள ஆய்வு மற்றும் அளவீடு செய்தல் பணி ஆகியவை குறித்தும், பொது மக்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், குருடம்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.