துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
வால்பாறை : வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், துாய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.வால்பாறை நகராட்சியில், துாய்மை இந்தியா திட்டம் துவங்கி, 10 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனையடுத்து, 'துாய்மையே சேவை' என்ற தலைப்பில், பள்ளி, கல்லுாரி மற்றும் பொது இடங்களில், துாய்மையை காக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக, வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர்கள் தலைமையில் நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் நடந்தது. முகாமை நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.வால்பாறையில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அறியும் வகையில், தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வால்பாறையின் இயற்கை அழகை பாதுகாக்கும் வகையில், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்து, துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், என, வலியுறுத்தப்பட்டது.