பம்பாவில் சிறப்பு முத்திரை; கேரள அமைச்சருக்கு கடிதம்
கோவை; கோவைப்புதுாரை சேர்ந்த முன்னாள் தபால் அலுவலர் ஹரிஹரன், தேவசம் போர்டு அமைச்சர் வாசவனுக்கு அனுப்பிய கடிதம்: கேரள அரசு, திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில், சபரிமலை அடிவாரத்தில் பம்பாவில், 20ம் தேதி உலக அய்யப்ப சங்கமம் நடத்தப்படுகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவசம் போர்டு துவங்கி, 75 ஆண்டுகளான நிலையில், 18ம் படி சிறப்பு முத்திரை மற்றும் பம்பா கிளை தபால் நிலையம் ஏற்படுத்தப்பட்டு, 50 ஆண்டுகளான நிலையில், இவ்விழா கொண்டாடுவது சிறப்புக்குரியது. பம்பா கிளை தபால் அலுவலகம், அர்ப்பணிப்புள்ள தபால் ஊழியர்களின் உதவியுடன், லட்சக்கணக்கான கடிதங்கள் மற்றும் தபால் பொருட்களை கையாள்வதன் வாயிலாக, இணைப்பு பாலமாக இருந்து வருகிறது. சிறந்த சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், பம்பாவில் உள்ள தபால் ஊழியர்களை கவுரவிக்க வேண்டும். இவ்விழாவை மையமாக வைத்து, ஆண்டுதோறும் பயன்படுத்தும் வகையில், பம்பா தபால் நிலையத்தில், சிறப்பு முத்திரை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.