பட்டாசுக்கு பணம் கேட்ட வியாபாரிக்கு கத்திக்குத்து
கோவை: பட்டாசுக்கு பணம் கேட்டதால் வியாபாரியை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம், ஓலம்பஸ் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்,42;ஆட்டோ டிரைவர். தீபாவளியை முன்னிட்டு, உறவினரின் பட்டாசு கடையில் வியாபாரத்தில் உதவி செய்ய சென்றார். மூன்று வாலிபர்கள் ஒன்றாக வந்து 1,000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கினர். ஆனால், 650 ரூபாய் மட்டும் கொடுத்தனர். வாசுதேவன் 350 ரூபாய் கேட்டபோது, தரமுடியாது என கூறினர். இதனால் தகராறு ஏற்பட்டது. முழு பணம் தர முடியாது என்றால், பட்டாசை எடுத்து செல்ல விடமாட்டேன் என்று கூறி, வாசுதேவன் தடுக்க முயன்றார். மூன்று பேரும் அவரை அடித்து உதைத்தனர். அப்போது வாசுதேவனுக்கு கத்திக்குத்து விழுந்தது. மூவரும் பட்டாசுடன் ஓடிவிட்டனர். வலது கையில் பலத்த காயம் அடைந்த வாசுதேவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். வாசுதேவன் புகாரின் பே ரில் ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மூன்று வாலிபர்களும் நஞ்சுண்டாபுரம் ரோடு, சுப்பிரமணியர் கோவில் வீதியை சேர்ந்தவர்கள் என தெரிந்தது. வினோத்,22, தனுஷ்,20, அருண்குமார்,20 ஆகிய மூவரையும் தேடி வருகின் றனர்.