உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை அரசு கலைக்கல்லுாரியில் நுாலகத்துக்கு நிரந்தர கட்டடம்; மாணவ, மாணவியர் கோரிக்கை

கோவை அரசு கலைக்கல்லுாரியில் நுாலகத்துக்கு நிரந்தர கட்டடம்; மாணவ, மாணவியர் கோரிக்கை

கோவை; அரசு கலைக் கல்லுாரியில், நிரந்தர நுாலகத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோவை அரசு கலைக்கல்லுாரியில் இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகளில் 6,430 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்லுாரியில், 23 இளங்கலை, 21 முதுகலை பாடப்பிரிவுகள் உள்ளன. இதுதவிர, 17 பாடங்களில் பி.எச்டி., கல்வியும் பயிற்றுவிக்கப்படுகிறது. கல்லுாரியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படுகின்றன. மாணவர்களின் கல்வி பயன்பாட்டுக்காக கல்லுாரியில், நுாலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நுாலகத்தில், 40 ஆயிரம் புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.கல்லுாரி வளாகத்தில் நுாலகத்துக்கான பிரத்யேக கட்டடம் இருந்தது. இக்கட்டடம் கட்டி, 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆனது. இந்நிலையில், கடந்த, மே, 2024 கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறையினர் இக்கட்டடம் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டதாக அறிக்கை அளித்தனர். இதையடுத்து அங்கு செயல்பட்டு வந்த, நுாலகம், தற்காலிகமாக, ஆடிட்டோரியத்தின் கீழ் பகுதியில் உள்ள அரங்கிற்கு மாற்றப்பட்டது.புதிய கட்டடத்தில் போதுமான அளவுக்கு இடவசதி இல்லாததால், மாணவர்கள் நுாலகத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி ஏற்கனவே இருந்த இடத்தில் புதிய நுாலக கட்டடத்தை கட்டித்தர கோரிக்கை விடப்பட்டுள்ளது.

அரசின் ஒப்புதலுக்கு காத்திருப்பு

கல்லுாரி முதல்வர் எழிலி கூறுகையில், ''கல்லுாரியில் மாணவர்களின் நலனுக்காக, தொடர்ந்து பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நுாலகம் அமைத்துத்தர அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட உள்ளது. தற்காலிக நுாலகத்தில் புத்தகங்களை பராமரிப்பது கடினமாகவே உள்ளது. புதிய நுாலகத்துக்கான கருத்துரு தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ