பள்ளிகளில் தேங்கிய மழைநீரால் சகதி; சிரமத்துடன் நடந்து மாணவர்கள் அவதி
கோவை: கோவையில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் மழையின் தீவிரம் அதிகமாக காணப்படுகிறது. மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குவதுடன், சில பள்ளிகளிலும் நீர் தேங்குகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து, நான்கு நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் நேற்று(அக்.22) திறக்கப்பட்டன. தொடர் மழையால் சில பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்கியிருந்தது. தொடர் விடுமுறை காரணமாக தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், பள்ளி மைதானங்களில் மழை நீர் தேங்கி, மாணவர்கள் நடக்க முடியாத அளவிற்கு சகதியாகக் காட்சியளிக்கிறது. சகதியில் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு, வகுப்பறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பருவமழை காலம் என்பதால், பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்காதவாறு அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி கட்டடங்களின் நிலை, மின்சார இணைப்புகள் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.