சூலுார் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
சூலுார்: சூலுார் விமானப்படை தள பாதுகாப்பு வீரர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம், சூலுாரில் விமானப்படை தளம் உள்ளது. இங்கு, பாதுகாப்பு பணிகளில் படைத்தள பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கேரள மாநிலம், பாலக்காடைச் சேர்ந்த ஷானு, 47, என்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளாக சூலுார் விமானப்படை தளத்தில் பணியாற்றி வந்த இவர், சில நாட்களுக்கு முன், விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பினார். பாதுகாப்பு கோபுரத்தில் நேற்று காலை 6:00 மணிக்கு பணியில் இருந்த போது, தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து, பாதுகாப்பு படையினர், படைத்தள அதிகாரிகள் விசாரணை நடத்திய பின், சூலுார் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஷானு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.