தேயிலை உற்பத்தி அதிகரிப்பு; கைகொடுத்தது பருவமழை
வால்பாறை; பருவமழைக்கு பின் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத் துவங்கியுள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வால்பாறையில் தேயிலை தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்களில் மொத்தம், 32,825 ஏக்கரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில் தேயிலை மட்டும், 25,253 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. இங்குள்ள சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில் மொத்தம், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை பெய்து வந்ததால், தேயிலை செடிகள் துளிர்விட முடியாத நிலையில், உற்பத்தி வெகுவாக பாதிக்கபட்டது. தற்காலிக தொழிலாளர்களும் வேலையிழந்தனர். இந்நிலையில், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு குறைந்து, இடையிடையே வெயில் சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனால் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விட்டு, உற்பத்தியும் அதிகரித்துள்ளதால், தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தோட்ட அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையில் கடந்த சில நாட்களாக, வெயிலும், சாரல் மழையும் கலந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனால், நீண்ட இடைவெளிக்கு பின் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத் துவங்கியுள்ளன. மேலும், தேயிலை செடிகளை தாக்கும் கொசுக்களை ஒழிக்க, தேவையான இடங்களில் பூச்சிமருந்தும் தெளிக்கப்படுகிறது. அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரை தேயிலை உற்பத்தி பரவலாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, கூறினர்.