பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சத்துணவு சாப்பிட்டார் கலெக்டர்
மேட்டுப்பாளையம்,: பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை, கோவை கலெக்டர் பவன்குமார் சாப்பிட்டார். தினமும் சாப்பாடு ருசியாக வழங்குகிறார்களா என, கேட்டறிந்தார். மேட்டுப்பாளையத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தை, மாவட்ட கலெக்டர் பவன்குமார் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். நேற்று காலை,7:30 மணிக்கு உழவர் சந்தை வந்து விவசாயிகளிடம் கலந்துரையாடினார். தினமும் காய்கறிகள் எவ்வளவு விற்பனையாகிறது. தோட்டத்தில் விளையும் காய்கறிகளா, விலைக்கு வாங்கி வந்தீர்களா என்ற விவரங்களை கேட்டு அறிந்தார். அவருடன் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் மல்லிகா, வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் மீனாம்பிகை ஆகியோர் உடன் இருந்தனர். இயற்கை விவசாய முறையில் காய்கறிகள் உற்பத்தி குறித்து, அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் முத்துசாமி, செயலாளர் ராஜூ, விவசாயிகள் புஜிங்கன், விஸ்வநாதன் ஆகியோர் மாவட்ட கலெக்டரிடம் கூறினர். அதைத் தொடர்ந்து நகராட்சி குப்பை கிடங்கில் செயல்பட்டு வரும், பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தார். பின்பு சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சுதந்திராபுரத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு வந்தார். விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களிடம், விபரங்களை கேட்டார். பின்பு மாணவிகளுடன் மாவட்ட கலெக்டர் பவன்குமார் அமர்ந்து, கேரம்போர்டு விளையாடினார். அதன்பின் காலை உணவு திட்டத்தின் வாயிலாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. மாணவர்களுடன் மாவட்ட கலெக்டர் அமர்ந்து, உணவு சாப்பிட்டார். அப்போது மாணவர்களுடன் தினமும் வழங்கப்படும் உணவு சுவையாக உள்ளதா, உணவுடன் முட்டை வழங்கப்படுகிறதா என விவரம் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மணிமலர், உதவி திட்ட அலுவலர் கிருஷ்ணகுமார், காரமடை ஊராட்சி ஒன்றிய சாலை ஆய்வாளர் பூலோக பாண்டியன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.