உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டுப்பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதற்குள் வெள்ளாமையே முடிஞ்சுடும்! வனத்துறை எந்த விபரமும் தெரிவிப்பதில்லை என புகார்

காட்டுப்பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதற்குள் வெள்ளாமையே முடிஞ்சுடும்! வனத்துறை எந்த விபரமும் தெரிவிப்பதில்லை என புகார்

பொள்ளாச்சி : 'காட்டுப்பன்றிகளை பிடிக்க அரசாணை பெறவே போராடிய நிலையில், அதற்கான குழுக்கள் அமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்குள் வெள்ளாமையே முடிந்துவிடும்,' என, குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் (பொ) விஸ்வநாதன் தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் விஜயகுமார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.விவசாயிகள் பேசியதாவது:காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க அரசாணை பெற பல ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்தும், அரசிடம் பேசியும் அனுமதி பெறப்பட்டது.காட்டுப்பன்றிகள் வசிக்கும் பகுதியான பள்ளம், புதர்களை ஆய்வு செய்து அவற்றை கொன்றோ அல்லது பிடித்து வனப்பகுதியில் விட்டு பயிர்கள் சேதத்தை கட்டுப்படுத்த வேண்டும், என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக குழு அமைக்கப்பட்டு, அதன் வாயிலாக கருத்துக்கள் கேட்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தற்போது, ஊராட்சி தலைவர்கள் பதவிக்காலம் முடிந்த நிலையில், அப்பகுதியில் ஆர்வம் உள்ள விவசாயிகளை குழுவில் இணைத்து கூட்டம் நடத்தக்கோரி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு மூன்று மாதங்கள் ஆகின்றன.இதுவரை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வனத்துறை தரப்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. கூட்டம் நடத்தி பிடிப்பதற்குள், காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்து விடும்; செயல்பாட்டுக்கு வருவதற்குள் வெள்ளாமையே முடிந்து விடும்.அரசாணை பெற போராடிய நிலையில், செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் போராட வேண்டியதுள்ளது.விவசாயிகள் குறைதீர்கூட்டத்தில் எவ்விதமான புகார் கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை. எதற்கு இந்த கூட்டம் நடக்கிறது என தெரியவில்லை.

கழிவு குவிப்பு

பி.ஏ.பி., கால்வாயில் கழிவுகள் கொட்டாமல் இருக்க, ஜமீன் கோட்டாம்பட்டி கால்வாய் அருகே பென்சிங் அமைக்கப்பட்டது. ஆனால், பென்சிங்கையொட்டி குப்பை கொட்டப்படுகின்றன. அங்கலகுறிச்சி, ஜமீன் ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளிலும் குப்பை கொட்டுகின்றனர்.ேஹாட்டல் கழிவுகள் என அனைத்தும் கால்வாய்களில் வீசப்படுகின்றன. நீர்நிலைகளில், பிளாஸ்டிக் கழிவுகள் வீசப்படுகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லே-அவுட் அனுமதி கொடுப்பதற்கு முன், அரணி கால்வாய் குறித்து தகவல்களை வருவாய்துறை அதிகாரிகள் உறுதி செய்து, அவற்றை பாதுகாக்க வேண்டும்.

தண்ணீர் பாதிப்பு

கோட்டூரில் விவசாய பூமி அருகே உள்ள, தென்னை நார் தொழிற்சாலையில் இருந்து வரும் மஞ்சி கழிவுநீர், கிணற்று நீரிலும், கால்வாயிலும் கலக்கிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை காலத்தில் நோயால் ஜாதிக்காய் பாதிக்கப்படுகிறது; நோய் குறித்து ஆய்வு செய்து அதை கட்டுப்படுத்த வழிவகைகளை தெரிவிக்க வேண்டும். தென்னையில் வெள்ளை ஈ பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிகாரிகள், மத்திய, மாநில அரசுக்கு இதன் தீவிரத்தை எடுத்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீர் திருட்டு

பி.ஏ.பி., கால்வாயில் நீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், நீர்வளத்துறை அதிகாரிகளுடன், போலீசார், வருவாய்துறை அதிகாரிகளும் இணைந்து செல்ல வேண்டும். காட்டம்பட்டி, அரசூர் கால்வாய்கள் அருகே உள்ள பைப்லைன்களை அகற்ற வேண்டும்.ஆனைமலையில், ஆழியாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். கிருஷ்ணா குளம் துார்வாரப்பட வேண்டும்.இவ்வாறு, பேசினர்.

புகார் கொடுங்க!

சப் - கலெக்டர் (பொ) பேசுகையில், ''விவசாயிகள் தெரிவித்த பிரச்னைகளுக்கு, பதில்களை அளிக்க வேண்டும். காட்டுப்பன்றிகள் கட்டுப்படுத்துவதற்கான குழு அமைத்து இருந்தால், அதன் தகவல்களை தெரிவிப்பதோடு, விவசாயிகள் கூட்டம் நடப்பதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். கால்வாய்களில் கழிவுகளை கொட்டுவோர் மீது ஊராட்சி நிர்வாகங்கள், போலீசில் புகார் கொடுக்க வேண்டும்,'' என்றார்.

மாவட்டமாக்க வேண்டும்!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பேசுகையில், ''பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது, மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இது குறித்து பல அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.அதற்குரிய முயற்சிகளை எடுக்க வேண்டும். அரசுக்கு மக்களின் எதிர்பார்ப்புகளை தெரிவிக்க வேண்டும். அதே போன்று, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயிலை மீண்டும் இயக்கினால், விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெற முடியும்,' என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை