உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானையை சுண்டியிழுக்கும் உணவு, பழங்களின் வாசம் வெள்ளியங்கிரி கோவிலுக்கு விசிட் செய்வதன் பின்னணி

யானையை சுண்டியிழுக்கும் உணவு, பழங்களின் வாசம் வெள்ளியங்கிரி கோவிலுக்கு விசிட் செய்வதன் பின்னணி

தொண்டாமுத்தூர் : பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் சுற்றி வரும் ஒற்றை காட்டு யானையை, சிறப்பு குழு அமைத்து, வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள, தென் கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இம்மலைத்தொடரின், அடிவாரத்தில் உள்ள பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. அடர் வனப்பகுதியில் கோவில் அமைந்துள்ளதால், இங்கு வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாகவே, இப்பகுதியில், ஒற்றைக்காட்டு யானை சுற்றி வருகிறது. அவ்வப்போது, ஒற்றைக் காட்டு யானை, உணவு தேடி, கோவில் சமையலறை மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை சேதப்படுத்தி வருகிறது.கடந்த, 5 நாட்களுக்கு முன், இரவில், உணவு தேடி வந்தபோது, அங்கிருந்த பக்தர்களை துரத்தியுள்ளது. இந்நிலையில், வனத்துறையினர் சிறப்பு குழு அமைத்து, ஒற்றை காட்டு யானையை கண்காணித்து வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தில் மீதமான உணவுகளை, குழி தோண்டி கொட்டி வருகின்றனர். அதோடு, யானைகளுக்கு விருப்பமான, தர்பூசணி, மாம்பழம் போன்றவைகளையும் இங்கு வீசுகின்றனர். இதன், வாசத்தால் இப்பகுதியில் உணவு தேடி, காட்டு யானை வருகிறது. காட்டு யானையை தடுக்க, உணவு கழிவுகளை, இங்கு கொட்டக்கூடாது என, கோவில் நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளோம். அதோடு, பக்தர்களின் பாதுகாப்பை கருதி, சிறப்பு குழு அமைத்து, ஒற்றை காட்டு யானையை கண்காணித்து வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ