பாலத்தில் 7 மாதத்துக்கு பின் மீண்டும் திருவள்ளுவர் சிலை
கோவை; அவிநாசி பழைய மேம்பால ரவுண்டானா வளைவில், ஜன., 3ல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. லாரியை துாக்கி நிறுத்துவதற்கு வசதியாக, மேம்பால வளைவில் இருந்த திருவள்ளுவர் சிலை, தற்காலிகமாக அகற்றப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் சிலை அமைக்கப்படும் என, நெடுஞ்சாலைத்துறையினர் உறுதி கூறியிருந்தனர். ஆனால், சிலையை நிறுவாமல் கிடப்பில் போட்டு விட்டனர். அதிகாரிகள் கவனத்துக்கு தெரியப்படுத்தியதும், ஏற்கனவே இருந்த சிலை அளவுக்கு புதிதாக தயார் செய்யப்பட்டது. பழைய இடத்தில் சிறு பீடம் அமைத்து, கிரேன் உதவியுடன் நேற்று சிலை நிறுவப்பட்டது.