இதுவும் சாத்தியமே! வீட்டில் இருந்தபடி பத்திரப்பதிவு; அறிமுகமாகிறது ஸ்டார் 3.0 திட்டம்
கோவை: புதிதாக வீடு, வீட்டு மனை, நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் வாங்குவோர், இருக்கும் இடத்தில் இருந்தவாறே, பத்திரங்களை 'ஆன்லைன்' முறையில் பதிவு செய்யும் வசதியை செயல்படுத்த, பத்திரப்பதிவு துறை ஆலோசித்து வருகிறது. 'ஸ்டார் 3.0' என இந்த திட்டத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. துரிதமான சேவைகளை உயர்ந்த தரத்துடன் வழங்குவது திட்டத்தின் நோக்கம். மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்த, 323.45 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டு, அதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த, நான்கு மாவட்டங்களுக்கு ஒரு குழு வீதம் அமைக்கப்பட்டுள்ளது. கோவையில், 'பைலட்' திட்டமாக செயல்படுத்த, பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள, காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில், இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்களை, ஆன்லைனில் ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும். பதிவாளருக்கு சிறு சந்தேகம் கூட ஏற்படாத வகையில், ஆவணங்களை சரியாக இணைப்பது அவசியம். ஒரு வெப்கேமரா, ஒரு ஸ்கேனிங் மற்றும் பிரிண்டர் இயந்திரம், அதிக திறன் கொண்ட இணைய வசதி இருந்தால் போதும். நில வழிகாட்டு மதிப்பீடு அடிப்படையில், விலை நிர்ணயித்து, பத்திரப்பதிவுத்துறைக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தி, அதற்கான ரசீதுகளை ஸ்கேன் செய்து இணைக்க வேண்டும். கோவை மண்டல பத்திரப்பதிவுத்துறை துணை தலைவர் பிரபாகரன் கூறுகையில், ''ஸ்டார் 3.0 திட்டம், தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது; கோவையில் விரைவில் நடைமுறைக்கு வரும். மனிதன் நினைத்தால் எதுவும் சாத்தியமே. தொழில்நுட்ப ரீதியாக தெரிந்தவர்கள், எளிதாக அரை மணி நேரத்தில் ஆவணங்களை பதிவு செய்யலாம்,'' என்றார்.