கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் மூன்று பேர் கைது
கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில், ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் மூன்று பேரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022 அக்., 23ம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட, அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் இதில் பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபின், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் பயங்கர நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது.வழக்கு என்.ஐ .ஏ.,வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ., அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி, இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர். சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு கோர்ட்டில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நான்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும், போத்தனுாரைச் சேர்ந்த அரபிக் கல்லுாரி ஆசிரியர் அபு ஹனிபா, செல்வபுரத்தைச் சேர்ந்த சரண் மாரியப்பன் மற்றும் உக்கடம் ஜி.எம்., நகரைச் சேர்ந்த மருத்துவ பிரதிநிதி பவாஸ் ரஹ்மான் ஆகியோரை, நேற்று கைது செய்தனர். அவர்கள் சென்னை அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், 'கைது செய்யப்பட்ட மூவரும், ஒருவரிடம் இருந்து கமிஷன் தொகைக்காக, நிதி திரட்டி தந்தது தெரியவந்தது.அபுஹனிபா கோவையில் உள்ள அரபிக் கல்லுாரியில் ஆசிரியராக செயல்பட்டு வந்தார். அங்கு உயிரிழந்த முபின் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ்., சித்தாந்தத்தில் தீவிரமாக இருந்தனர்.தாக்குதல் நடத்துவதற்கு முன், ஐ.எஸ்., இயக்கத்தின் அப்போதைய தலைவராக இருந்த அபு அல்ஹசன் அல்ஹாஸ்மி, தாக்குதல் நடத்துவதாக உறுதியேற்றார். இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது' என கூறப்பட்டுள்ளது.