தலைமைத்துவ விருதுக்கு கோவையில் மூவர் தேர்வு
கோவை: சிறந்த தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படும், 'அண்ணாதுரை தலைமைத்துவ விருது'க்கு, கோவை மாவட்டத்தில் மூன்று பேர் தேர்வாகியுள்ளனர்.தமிழகத்தில் சிறப்பாக பணிபுரியும் தலைமை ஆசிரியர்களை ஊக்குவிக்க, பள்ளி கல்வித்துறை சார்பில், 2022-23 கல்வியாண்டில் இருந்து, 'அண்ணாத்துரை தலைமைத்துவ விருது' வழங்கப்படுகிறது. 2024-25ம் கல்வியாண்டு விருதுக்காக அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த, 100 தலைமையாசிரியர்கள் மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தனித்துவமான பள்ளி செயல்பாடுகள், உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர் திறன் மேம்பாடு, தேர்ச்சி விகிதம், ஒழுங்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட, 19 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் காரமடை கண்ணார்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கவிதா, நெகமம் அரசு மகளிர் உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சாவித்திரி மற்றும் அரசூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கண்ணன் ஆகியோர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.விருது வழங்கும் விழா, 6ம் தேதி, திருச்சியில் உள்ள தேசியக் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. விருதுக்கு தேர்வான ஒவ்வொரு பள்ளிக்கும், ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். தலைமையாசிரியருக்கு பாராட்டு சான்றிதழ், நினைவு கேடயம் வழங்கப்பட உள்ளன.