நாளை சந்திர கிரகணம் நடை திறப்பு நேரம் மாற்றம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள கோவில்களில், சந்திர கிரகணத்தை யொட்டி கோவில் நடை திறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. சந்திரகிரகணம் நாளை (3ம் தேதி) மதியம் முதல் மாலை வரை இருக்குமென்பதால், பொள்ளாச்சி பகுதியில் பெரும்பாலான கோவில்கள் நடை திறக்கும் நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நாளை, மதியம் 1:00 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும். மேலும், பவுர்ணமி திருவிளக்கு வழிபாடு பூஜைகள் இல்லை. இதேபோல் பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மதியம் 12:30 முதல் அந்த நாள் முழுவதும் கோவில் நடை அடைக்கப்படும். அடுத்த நாள் (4ம் தேதி) காலை, 6:30 மணிக்கு கோவில் நடை வழக்கம் போல் திறக்கப்படும். இத்தகவலை கோவில் நிர்வாகங்கள் தெரிவித்தன.