உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை கோயில்களில் அறங்காவலர் பதவி விண்ணப்பத்தில் கிடுக்கிப்பிடி கேள்விகள்

கோவை கோயில்களில் அறங்காவலர் பதவி விண்ணப்பத்தில் கிடுக்கிப்பிடி கேள்விகள்

கோவை: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கோவை மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டது. சில கோயில்களில் பழைய அறங்காவலர்களுக்கே பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பதவி காலம் முடிய உள்ள சில கோயில்களுக்கு அறங்காவலர்கள் தேர்ந்தெடுக்க, அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அவ்வகையில், காரமடை அரங்கநாதர் கோயில், உக்கடம் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில், பெரிய கடை வீதி கோனியம்மன் கோயில், சுக்ரவாரப்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயில், இடுகம்பாளையம் அனுமந்தராய சுவாமி கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இப்பதவிக்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம் என, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அறிவித்துள்ளார். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது www.hrce.tn.gov.inஎன்ற இணைய தளத்திலோ, 25க்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தில், இந்திய குடிமகனா, எந்த மதத்தை சேர்ந்தவர், ஜாதி என்ன, அரசியல் கட்சியை சேர்ந்தவரா, உறவினர் யாரேனும் வேறு கோயில்களில் அறங்காவலர்களாக இருக்கிறார்களா, கடவுள் நம்பிக்கை உள்ளவரா, கோயில் சொத்துக்களுக்கு குத்தகைதாரரா, கோயில்களில் இருந்து வெகுமதி அல்லது ஆதாயம் பெற உரிமையுள்ளவர்களா, சொத்துக்கள் இருந்தால் தோராய மதிப்பு மற்றும் அவற்றில் இருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம், சொந்தமாக உள்ள நிலங்கள், வீடுகள், கல்வித்தகுதி, தாய் மொழி மற்றும் தெரிந்துள்ள இதர மொழிகள் உள்ளிட்ட 22 விதமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மதம் சார்ந்த கேள்வியில் சைவமா, வைணவமா எனவும் குறிப்பிட வேண்டும். கோயில் சொத்துக்களை அனுபவிக்கவில்லை என்பதற்கான சான்று, வழக்கில் தண்டனை பெற்றவர் இல்லை என்பதற்கு, காவல்துறை சான்று பெற்றும் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளதால், அறங்காவலர் பதவியை கைப்பற்ற காய்களை நகர்த்தி வரும் அரசியல் கட்சியினர், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை