சுற்றுலா பயணியர் வருகை; களை கட்டியது வால்பாறை
வால்பாறை; தொடர் விடுமுறையால், வால்பாறையில் திரண்ட சுற்றுலாபயணியரால், தங்கும் விடுதிகள் ஹவுஸ் புல்லாகின. வால்பாறையின், இயற்கை அழகை கண்டு ரசிக்க நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். அட்டகட்டி ஆர்க்கிட்டோரியம், டைகர் பால்ஸ், கவர்க்கல் வீயூ பாய்ண்ட், நல்லமுடி பூஞ்சோலை, சோலையாறு அணை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை, கண்டு ரசிக்கின்றனர். வால்பாறையில் பருவமழைக்கு பின் கடந்த சில நாட்களாக குளு குளு சீசன் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலாபயணியர் அதிக அளவில் வால்பாறையில் திரண்டுள்ளனர். இதனிடையே பள்ளிகள் காலாண்டு தொடர் விடுமுறையால் அவர்கள் அதிக அளவில் வால்பாறைக்கு வருகை தந்துள்ளனர். தடையை மீறும் சுற்றுலா பயணியர் வால்பாறை மலைப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் சுற்றுலாபயணியர் குளிக்க மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார். இதை நடைமுறைப்படுத்தும் வகையில் கடந்த மாதம் வரை சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் சுற்றுலாபயணியர் குளிக்காத வகையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கடந்த வாரம் சென்னைக்கு திரும்பிய நிலையில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடாததால், நேற்று சுற்றுலா பயணியர் தடையை மீறி கூழாங்கல் ஆற்றில் குளித்தனர்.