மடத்துக்குளத்தில் போக்குவரத்து நெரிசல்
மடத்துக்குளம் : மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டிற்குள் புறநகர் பஸ்கள் செல்லாமல், ரோட்டிலேயே பயணியரை இறக்கிச்செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக, மதுரை, திண்டுக்கல் உட்பட தென் மாவட்டங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.இதனால், இந்த ரோட்டில் எப்போதும் போக்குவரத்து அதிக அளவில் காணப்படுகிறது. மடத்துக்குளத்தில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டுக்குள் டவுன்பஸ்கள் தவிர புறநகர் பஸ்கள் செல்வதில்லை.பழநி, மதுரை, திண்டுக்கல், கம்பம் போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் புறநகர் பஸ்கள் உள்ளே செல்லாமல், பயணியரை ஏற்றி, இறக்கிச்செல்கின்றனர். இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும் விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து பஸ்களும் மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று திரும்ப, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.