செப்.1ல் உருமாறும் இந்தியா மாநாடு; எஸ்.எஸ்.வி.எம்., சார்பில் நடக்கிறது
கோவை; எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்கள் சார்பில், 'உருமாறும் இந்தியா மாநாடு-2025', செப்.1 முதல் 3 வரை நடக்கிறது. எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணிமேகலை கூறியதாவது: செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித நேயம் இணைந்து உலகை உருவாக்குதல் எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு, மாநாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பங்கேற்பாளரும், கல்வியாளர் அல்லது மாணவராக இருப்பர். நம் தேசத்தின் மாற்றத்துக்கான காரணமாக இருப்போம் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவர். தொழில்முனைவோர், சிந்தனையாளர்கள் என, பலரும் பங்கேற்க உள்ளனர். சினிமா இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்திய கலைஞர் ஹர்ஷித் அகர்வால், பேட்மின்டன் வீரர் பிரகாஷ் படுகோன் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். மாணவர் முன்னோடி விருதுகள், உத்வேக குழு விருதுகள் என, பல்வேறு விருதுகளும் வழங்கப்பட உள்ளன. மாணவர் குழுக்கள், தங்கள் கருத்துக்களை தைரியமாக கூறுவதை கவுரவிக்கும் வகையில், 'பிரீனியர்' விருது வழங்கப்படுகிறது. 'இன்ஸ்பிரேஷனல் குரு' விருதும் வழங்க உள்ளோம். இவ்வாறு, அவர்கூறினார்.