குறுமைய விளையாட்டு போட்டி; பழங்குடியின மாணவர்கள் வெற்றி
வால்பாறை; கோட்டூர் குறுமைய அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில், பழங்குடியின மாணவர்கள் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். வால்பாறை நகரில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் பல்வேறு செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்த, 150 பழங்குடியின மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பில் செயல்படும் இந்த பள்ளியில், பழங்குடியின மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்கின்றனர். இந்நிலையில், இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கோட்டூர் குறுமைய அளவில் நடைபெற்ற, 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில், கைப்பந்து, வலைப்பந்து, கூடைப்பந்து ஆகிய போட்டிகளில் முதல் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் (எஸ்.எஸ்.ஏ.,) ராஜாராம், சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.