அரசு பஸ்களில் டிரிப் குறைப்பு; கால்கடுக்க காத்திருக்கும் பயணிகள் கடுப்பு கால்கடுக்க காத்திருக்கும் பயணிகள் கடுப்பு
கோவை; அரசு போக்குவரத்து கழகத்துக்கு ஏற்படும் நஷ்டம் தவிர்க்க, 40 முதல், 100 கி.மீ., தொலைவுக்கு இயக்கப்படும் மப்சல் பஸ் டிரிப் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது; பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். கோவையில் இருந்து 100 கி.மீ., தொலைவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், மப்சல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக, மதியம் 12:00 முதல் மாலை, 4:00 மணி வரை கூட்டம் இருப்பதில்லை. போதிய வருவாய் இருக்காது. ஈட்டப்படும் வசூல் டீசல் செலவுக்கே போதுமானதாக இருக்காது என்பதால், பயணிகள் வருகை இல்லாத தருணத்தில், ஒரு டிரிப் 'கட்' செய்து கொள்ள, அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இவ்வாறு, ஒரு டிரிப் நிறுத்தப்படுவதால், அவ்வழித்தடங்களில் செல்ல வேண்டிய பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். அடுத்த பஸ் வரும் வரை காத்திருக்கின்றனர். ஒரு பஸ்சுக்கும் அடுத்த பஸ்சுக்கும் இடையே, 30 நிமிடம் இடைவெளி இருந்தால், அதுவரை கால்கடுக்க ஸ்டாப்பில் காத்திருக்க வேண்டியுள்ளது. அதிகமான கால இடைவெளி விட்டு வரும் பஸ்களில் இருக்கை கிடைப்பதில்லை; செல்லும் இடம் வரை பஸ்சுக்குள் நின்று கொண்டே பயணிக்க வேண்டியிருக்கிறது. பஸ் இயக்கத்தை நிறுத்துவதற்கு முன், அவ்வழித்தடத்தில் பயணிகள் பாதிக்கப்படுவார்களா என்பதை அதிகாரிகள் கள ஆய்வு செய்து, முடிவெடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. அரசு போக்குவரத்து கழக கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் கூறுகையில், 'பயணிகள் வருகை இல்லாத நேரத்தில் பஸ்களை இயக்காமல் நிறுத்த அறிவுறுத்துகின்றனர். போக்குவரத்து கழகத்துக்கு ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க இந்த நடவடிக்கை என்று சொல்கின்றனர். நாங்கள் என்ன செய்வது' என்றனர்.