ரூ.1.41 கோடி மோசடி: இருவர் கைது
கோவை: கோவை காரமடையை சேர்ந்தவர் விஜயா, 51. அதேபகுதியில், தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில், காரமடை அன்னவீதியை சேர்ந்த கார்த்திகேயன், 55 கணக்காளராக பணிபுரிந்து வந்தார். நிறுவனத்தில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீகுமார், 45, மற்றும் காரமடையை சேர்ந்த அருண்குமார், 45 ஆகியோர் பணம் வசூல் செய்யும் பணியை மேற்கொண்டனர். கடந்த, ஜூலை, 2021 முதல், செப்., 2024 ம் ஆண்டு வரை கார்த்திகேயன், ஸ்ரீகுமார், அருண்குமார் ஆகிய மூவரும் வசூல் செய்த ரூ.1.41 கோடியை நிறுவனத்தின் கணக்கில் வராமல் மோசடி செய்து தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். இந்நிலையில், விஜயா நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்க்கும் போது, மோசடி தெரியவந்தது. இதுகுறித்து அவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் கார்த்திகேயன் உள்ளிட்ட மூவரையும் தேடி வந்தனர். நேற்று கார்த்திகேயன், ஸ்ரீகுமார் ஆகியோரை கைது செய்தனர்.