பாதுகாப்பில்லாத பன்னிமேடு ரேஷன் கடை; மாற்று இடம் வழங்க கோரிக்கை
வால்பாறை ; வால்பாறை அருகே, பன்னிமேடு எஸ்டேட்டில், பாதுகாப்பில்லாத ரேஷன் கடை வாயிலாக பொருட்கள் வழங்குவதால், தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.வால்பாறை தாலுகாவில் மொத்தம் உள்ள, 15,250 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 48 ரேஷன் கடை வாயிலாக பொதுவினியோக திட்டத்தில் பொருட்கள் வழங்கப்படுகின்றன.இந்நிலையில், வால்பாறை நகரை தவிர, எஸ்டேட் பகுதிகளில் செயல்படும் ரேஷன் கடைகள் அனைத்தையும் யானைகள் அடிக்கடி சேதப்படுத்தி வருவதால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகி வருவதோடு, பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் ரேஷன் பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.யானைகளின் தொந்தரவால் வால்பாறையை சுற்றியுள்ள பெரும்பாலான எஸ்டேட்களில், மாதம் தோறும் திறந்தவெளியில் வைத்து தான் ரேஷன் பொருட்களை வழங்குகின்றனர்.குறிப்பாக, பன்னிமேடு பங்களா டிவிஷன் பகுதியில் செயல்படும் ரேஷன் கடையை, யானைகள் சேதப்படுத்தியுள்ளதால், கட்டடத்தின் நான்கு புற சுவர்களும் இடிந்த நிலையில் உள்ளது. அதே இடத்தில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதால், பொருட்களை வாங்கி செல்லும் மக்களுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.தொழிலாளர்கள் கூறுகையில், 'பன்னிமேடு எஸ்டேட்டில், யானைகள் வழித்தடத்தில் ரேஷன் கடை உள்ளது. இதனால் வரும் வழியில் உள்ள ரேஷன் கடையை யானைகள் சேதப்படுத்துகின்றன. ரேஷன் பொருட்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை.எனவே, மாற்று இடத்தில் ரேஷன் கடைக்கு இடம் ஒதுக்கி வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம் பொருட்கள் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் கூறுகையில், ''வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் தடையில்லாமல் வழங்கப்படுகிறது. யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியிலும், ரேஷன் கடையே இல்லாத பகுதியிலும் கூட வாகனங்களில் பொருட்கள் கொண்டு சென்று, மக்களுக்கு வழங்கப்படுகின்றன.''பன்னிமேடு பங்களா டிவிஷன் பகுதியில் மாற்று இடம் எஸ்டேட் நிர்வாகம் வழங்கினால், ரேஷன் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு, மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.