ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு வர அறிவுரை
கோவை; 'நாளை மறுதினம் (14ம் தேதி) நடைபெற உள்ள யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு ஒரு மணி நேரத்துக்குமுன்னதாக தேர்வர்கள் தேர்வறைக்கு வர வேண்டும்' என, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் யு.பி.எஸ்.சி., தேர்வு, ஒருங்கிணைந்த ராணுவ தேர்வு (தொகுதி -II), 14ம் தேதி கோவையில் நான்கு மையங்களில் நடக்கிறது; 1,535 பேர் தேர்வெழுதுகின்றனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர், கலெக்டர் தலைமையில் துணை கலெக்டர் நிலையில் இரு உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், தாசில்தார் நிலையில் 4 தேர்வு மையங்களுக்கு தலா ஒரு தேர்வு மைய ஆய்வு அலுவலர்கள், துணை தாசில்தார் நிலையில் 5 தேர்வு மைய உதவி கண் காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வை ஆய்வு செய்ய, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மொபைல் போன் ஜாமர்கள் நிறுவப்பட்டுள்ளன. தடையில்லா மின்வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு செல்லபஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வழங்கியநுழைவு சீட்டுடன், தேர்வு கூடத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தேர்வர்கள் வர வேண்டும். தேர்வு துவங்குவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன், வாயில் கதவு பூட்டப்படும். அதன்பின், அனுமதிக்கப்பட மாட்டார்கள். யு.பி.எஸ்.ஸி., இணையத்தில் உள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு, கூறி யுள்ளார்.