வைகாசி விசாக திருத்தேர் உற்சவம் கோலாகலம்
கோவை; கோட்டை கரிவரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி விசாகத்தை ஒட்டி சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும், திருத்தேர் உற்சவமும் துவங்கியது. கடந்த 2ம் தேதி இரவு 8:00 மணிக்கு, வாஸ்து சாந்தி பூஜைகளுடன்நிகழ்ச்சி துவங்கியது. மறுநாள் இரவு 7:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் கொடியேற்று விழா நடந்தது. ஹம்சவாகனத்தில் சுவாமி பவனி வந்து காட்சியருளினார்.நேற்று இரவு வழக்கமான பூஜைகளை தொடர்ந்து சுவாமி சேஷவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று இரவு பஞ்சமுக ஹனுமன் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 12ம் தேதி திருவிழா நிறைவடைகிறது.