ஒன் வேயில் வாகனங்கள்; போக்குவரத்து பாதிப்பு
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் 'ஒன் வே' திசையில் பயணிப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வரும் வழியில், அதிகப்படியான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், ஒரு சிலர் சர்வீஸ் ரோட்டில் 'ஒன் வே' திசையில் பயணிக்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து அபாயம் அதிகம் உள்ளது.மேலும், சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் இருக்கும் கடை அருகே, வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படும் போது, எதிரே வரும் வாகனம் ரோட்டை கடக்க முடிவதில்லை. இதனால் போக்குவரத்து பாதிப்பதுடன், வாகன ஓட்டுனர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. சில சமயங்களில் கைகலப்பில் முடிகிறது.இதனால், மக்கள் பலர் வாகனங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலையும் அவ்வப்போது ஏற்படுகிறது.குடியிருப்பு பகுதிகளுக்கு 'ஒன் வே'யில் வாகனங்களில் செல்வதால், சர்வீஸ் ரோட்டை அகலப்படுத்தினால் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இது குறித்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பலனளிக்கவில்லை என்கின்றனர் பொதுமக்கள்.