உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாங்க இருக்கோம்... கவலைப்படாதே! பிள்ளைகளுக்கு நம்பிக்கை குடுங்க பெற்றோரே

நாங்க இருக்கோம்... கவலைப்படாதே! பிள்ளைகளுக்கு நம்பிக்கை குடுங்க பெற்றோரே

ரிதன்யா!

கடந்த சில நாட்களாக, அனைத்து இடங்களிலும் வேதனையுடன் முணுமுணுக்கப்பட்ட பெயர். நல்ல படிப்பு, அழகு, வசதி அனைத்தும் இருந்தும், ஏன் இந்த முடிவு என அங்கலாய்க்காதவர்கள் இல்லை... இறுதியாக பேசியதிலும் அவ்வளவு தெளிவு. என்ன பயன்!பொதுவாகவே திருமணம் ஆகி செல்லும் பெண்கள், பல கஷ்டங்களை பெற்றோரிடம் ஆழமாக பகிர்ந்து கொள்வதில்லை. இதற்கு காரணம், பெற்றோர் கஷ்டப்பட கூடாது; சுற்றத்தார் முன் அவமானப்பட்டு விடக்கூடாதே என்பதுதான்.பெண் பிள்ளைகளை பெற்ற பெண்கள் சற்று கவனமுடனும், ஆண் பிள்ளையை பெற்ற பெற்றோர் பொறுப்புடனும் இருக்க வேண்டும் என கூறுகிறார், 'பேரன்டிங் கோச்' மற்றும் மனநல ஆலோசகர் தீபா மோகன்ராஜ்.அவர் நம்மிடம் கூறியதிலிருந்து... திருமணத்திற்கு முன் பெற்றோர், பிள்ளைகளுடன் அமர்ந்து பேசுங்கள். அவர்களின் மனநிலை, விருப்பம் என்ன என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஏதேனும் ஒரு இடத்தில், மணமகன் செயல்பாடு பிடிக்கவில்லை, பேசுவது பிடிக்கவில்லை என பெண்கள் கூறினால், சற்று அதில் கவனம் செலுத்துங்கள். வசதியை மட்டும் பார்த்து முடிவு எடுத்து விடாதீர்கள்.n சூழல் எதுவானாலும், தவறு உன் மீதே இருந்தாலும், தயக்கமின்றி என்னிடம் வா என்ற நம்பிக்கையை பெற்றோர் இருவரும், வெளிப்படையாகவே கூறுங்கள். திருமணத்திற்கு பின் பெண் வேலைக்கு செல்லக்கூடாது, பணம் வேண்டும் என்ற அதிக கெடுபிடி செய்யும் சம்மந்தங்களை வசதிக்காக ஒத்துக்கொண்டு வேதனைப்பட வேண்டாம். பெண் விரும்பினால் திருமணம் முடிந்து படிப்பாள்; வேலைக்கு செல்வாள் அல்லது தொழில்முனைவோராக இருப்பாள் என்பதை தெளிவாக கூறிவிடுங்கள். உயர்கல்வி முடித்தவுடன் திருமணத்தை செய்துவிடாமல், இரண்டு ஆண்டுகளாவது வேலைக்கு அனுப்புங்கள். முடிந்தால் வெளியூரில் வேலைக்கு அனுப்புங்கள்; அங்கு கிடைக்கும் அனுபவங்கள் உலகை புரிந்துகொள்ளவும், சுயமாக முடிவு எடுக்கவும் மனநிலையை தரும். திருமணம் தான் வாழ்க்கை என்பதை திணிக்காமல், அவர்களின் முடிவுகளுக்கு மதிப்பளியுங்கள். சுற்றத்தார் எப்போதும் குறை கூறுவர்; அவர்களின் கருத்துக்களை புறம் தள்ளி பிள்ளைகளின் உணர்வுக்கு முன்னுரிமை கொடுங்கள். பெண் பிள்ளைக்கு மட்டுமல்ல, ஆண் பிள்ளைக்கும் சமையல் கற்றுக்கொடுங்கள். மாறும் சமூகத்தில், வசதிகள் கொட்டிக்கிடந்தாலும் திறமையும், வேலை பகிர்வு முக்கியம் என்பதை உணர்த்துங்கள். திருமணம் முன் வரை தந்தை, பின்னர் கணவர் தான் உன் துணை என்ற பஞ்சாங்கத்தை நிறுத்தி, யாரையும் சாராமல் சிறகை விரித்து பறக்கும் தைரியத்தை கற்றுக்கொடுங்கள், அனைத்திற்கும் எல்லை உண்டு; அதை தாண்டும் போது, உதறி செல்லும் துணிவையும் சொல்லிக் கொடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sivagiri
ஜூலை 06, 2025 13:52

பொண்ணுக்கு வயசு வந்தவுடனே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சு, இருபத்து ஏழு வயசு வரைக்கும், ஒவ்வொரு மாப்பிள்ளையா கழிச்சிக்கிட்டே வந்து? முன்னூறு பவுன் போடுகிற அளவு வசதியானவங்க - ஏன் ஐநூறு பவுன் போட்டால்தான் ஆகணும்னு சொல்றவய்ங்க கிட்ட பொண்ணை கொடுக்கிறாய்ங்க? அதுவும் அப்பா பணம் இருக்கு, ஆனால், வேலை வெட்டி இல்லாதவன் - என்ன செஞ்சிக்கிட்டு இருப்பான்? எந்த நேரமும் தண்ணி அடிச்சிட்டு, போனில் ஆபாசப்படம் பாத்திக்கிட்டு, மெண்டல் மாதிரி ஊர் சுத்திக்கிட்டுதான் இருப்பான். ஐம்பது பவுன் போட்டா போதும்னு சொல்றவன்கிட்ட பொண்ணை கொடுத்து, கொஞ்ச நாள், கழித்து, நல்லா வாழறதை பார்த்த பிறகு இன்னொரு நூறு பவுன் கொடுத்தா, மாமனார் திசையை பாத்து கும்பிடு போட்டு வாழ்வான் . . .


Seekayyes
ஜூலை 06, 2025 06:29

யெஸ், யெஸ், யெஸ். எனக்கு இரண்டு பெண்கள். மூத்த மகளுக்கு 2012ல் திருமணம் செய்து வைத்தோம். கலப்பு திருமணம், மகளும், மருமகனும் பெங்களுரில் வேலை. என் மகள் அசுர உழைப்பாளி, பன்னாட்டு IT நிறுவனத்தில் பதிவு உயர்வு மேல் உயர்வு. வெளிநாடு செல்ல வாய்ப்பு வந்தது. கேட்கனுமா மாப்பிள்ளைக்கு!!முட்டுகட்டைகளை அவிழ்க்க ஆரம்பித்தார் தன் பெற்றோர் உடன் சேர்ந்து. என் மகள் இது வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்தார், எங்களிடம் கலந்தாலோசித்தார், ஒருமித்த முடிவு விவாகரத்து. எங்கள் மகள் வாழ்க்கைதான் முக்கியம். வந்து பேசினார்கள், முகத்தில் அரைந்தது போல் சொல்லிவிட்டோம் உங்கள் மகன் வாழ்க்கையை விட எங்கள் மகள் வாழ்க்கைதான் எங்கள் உயிர் என்று. இன்று, 11 வருடம் கழிந்து எங்கள் மகள் அவள் விரும்பிய நாட்டின் பிரஜை, முதுகலை மேற்படிப்பு, மிக பெரிய IT கம்பெனியில் மேல்நிலை அதிகாரி. மறுமணம், எனக்கு அது தேவேயேயில்லை என்கிறார். தேவை என்றால் அதை இந்த நாட்டில் தேடி கொள்கிறேன், அம்மா முந்தானையை பிடித்து கொண்டு சுயசிந்தணை அற்ற இந்திய கணவன் தேவையேயில்லை என்று சொல்லிவிட்டார். இன்று இந்தியாவில் நடக்கும் பெண்களுக்கு, குறிப்பாக கல்யாணம் ஆனப்பிறகு நடக்கும், அநியாயங்களை பார்த்தால் அவர் சொல்வது 100% உண்மையே. (பி.கு. இரண்டாவது மகள் தன் அக்காவின் அறிவுரை ஏற்று தனக்கு பிடித்தமான ஐரோப்பிய கணவனை கைப்பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு முன்பே அவர் வாழும் நாட்டின் பிரஜை என்பது கொசுறு செய்தி).


Kundalakesi
ஜூலை 06, 2025 12:23

கலப்பு மனம் என்றால் காதல் திருமணம் என யூகிக்க முடிகிறது. ஈகோ பிரச்னையை பெற்றோர்கள் ஊதி பெருசு படுத்திவிட்டீர்கள். அனுசரிச்சு போக அறிவுரை கூறாமல் விவாகரத்துக்கு வழி ஏற்படுத்தி விட்டீர்கள். நீங்கள் உங்க மனைவியை பிரிந்து 4 நாள் தனியே இருங்கள் அப்பொழுது தான் துணையின் அருமை தெரியும். ஆண் பெண் இருவரும் தவறு செய்வது இயல்பான ஒன்று. அதை பக்குவமாக பேசினால் மனசு மாறும். குடி கடன் விட்டு நல்ல நிலை நோக்கி செல்ல வாய்ப்பு. முடிந்தால் தனி குடித்தனம் வையுங்கள் .


Sivagiri
ஜூலை 06, 2025 14:08

அடப்பாவி - - வெளிநாட்டில் சென்று ஒண்டியா ,செட்டில் ஆவதுதான் வாழ்க்கையா? எனக்கு தெரிஞ்சு, வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றவர்கள் முக்கால்வாசி பேர், கொஞ்சம் சம்பாதித்து விட்டு, ஒரு அமௌண்ட்டை தேத்திக்கிட்டு, இங்கே சொந்த ஊருக்கு வந்து புள்ளை குட்டிய பெத்திக்கிட்டு, ஒரு வீட்டை கட்டீட்டு, சிவனேன்னு வாழறாய்ங்க, பொழுது போறதுக்கு, ஜெராக்ஸ் கடை, போன் கடை வச்சி நிம்மதியா இருக்காய்ங்க . . . ஒன்னை மாதிரி வெவரங்கெட்டவையாகத்தான் . . . ? . .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை