உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கைத்தறி தொழிலை பாதுகாக்க ஹேண்ட்லுாம் பார்க்; நெசவாளர்கள் எதிர்பார்ப்பு சிறுமுகை நெசவாளர்கள் எதிர்பார்ப்பு

கைத்தறி தொழிலை பாதுகாக்க ஹேண்ட்லுாம் பார்க்; நெசவாளர்கள் எதிர்பார்ப்பு சிறுமுகை நெசவாளர்கள் எதிர்பார்ப்பு

மேட்டுப்பாளையம்; சிறுமுகை சுற்றுப் பகுதிகளில், 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் இருப்பதால், தமிழக அரசு சிறுமுகையில் 'கைத்தறி நெசவு பூங்கா' (ஹேண்ட்லூம் பார்க்) அமைக்க வேண்டும் என, நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.கோவை மாவட்டத்தில் உள்ள சிறுமுகையில், மூலத்துறை, பகத்தூர், வெள்ளிக்குப்பம்பாளையம், திம்மராயம்பாளையம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, அன்னூரில் மூக்கனூர், பவானிசாகரில் தொட்டம்பாளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில், 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர்.நேரடியாக, 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இது அல்லாமல் நெசவு சார்ந்த தொழிலில், 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் சாப்ட் சில்க், கோர காட்டன், காட்டன் ஆகிய மூன்று சேலைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.தமிழகத்தில் சிறுமுகையில் தான், முதன் முதலில் மென்பட்டு என்னும் சொல்லக்கூடிய 'சாப்ட் சில்க்' உற்பத்தி செய்து அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சேலை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதனால் சிறுமுகையில் உற்பத்தி செய்யப்படும் சாப்ட் சில்க், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியில் செய்யப்படுகிறது. சிறுமுகை நகரில் 60க்கும் மேற்பட்ட பட்டு ஜவுளிக்கடைகள் உள்ளன. இப்பகுதி மக்கள் கைத்தறி நெசவை பாரம்பரியமாக நெசவு செய்து வருகின்றனர். அதனால் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகளை நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருந்து மாதம் ஒன்றுக்கு பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுகிறது. அதிகமான கைத்தறி நெசவாளர்கள் இருப்பதால், 15 கைத்தறி கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் செயல்படுகின்றன. சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்களுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது.இதுகுறித்து சிறுமுகை அனைத்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:பாரம்பரிய தொழில் என்பதால் இங்கு எவ்வித பயிற்சி கூடமும் இல்லை. சிறுமுகைப் பகுதியில், 5 ஏக்கர் நிலம் அரசு நிலம் உள்ளது. அந்த இடத்தில் கைத்தறி நெசவு பூங்கா ('ஹேண்ட் லூம் பார்க்') அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.,அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சி வேட்பாளர்களும், சிறுமுகையில் கைத்தறி நெசவு பூங்கா அமைப்பதாக தேர்தல் வாக்குறுதியில் கூறினர். ஆனால் இதுவரை கைத்தறி நெசவு பூங்கா அமைக்க, நடவடிக்கை ஏதும் இல்லை. கைத்தறி நெசவு பூங்கா அமைத்தால், பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நலிவடைந்து வரும் கைத்தறி நெசவுத் தொழில் மேன்மை அடையும். மேலும் இந்த தொழிலை நம்பி உள்ள, நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.கைத்தறி ஹேண்ட்லூம் பார்க்கில், சேலைகள் உற்பத்தி செய்ய, புதுப்புது டிசைன்கள் அறிமுகம் செய்வர். மக்களும் இந்த டிசைன்களை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் நெசவுக்கு தேவையான மூலப்பொருள்களான பட்டு, ஜரிகை, நூல் ஆகியவற்றை, அரசு கொள்முதல் செய்து, தங்கு தடை இல்லாமல் நெசவாளர்களுக்கு கிடைக்கும். இதனால் தடையில்லாமல் இத்தொழில் நடைபெற்று வரும்.இங்கு பயிற்சி கூடமும் அமைத்து, அதன் வாயிலாக பலருக்கு நெசவுத்தொழில் கற்றுக் கொடுக்க, இது ஒரு பயிற்சி பட்டறையாகவும் இருக்கும். எனவே தமிழக அரசு, கைத்தறி நெசவாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, சிறுமுகையில் ஹேண்ட்லூம் பார்க் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி