பேரூர் தர்ப்பண மண்டபம் இன்னும் திறக்காதது எதனால்?
தொண்டாமுத்தூர்; பேரூர் படித்துறையில், புதிய தர்ப்பண மண்டபம் பணி முடிந்தும், திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.பேரூர் படித்துறையில், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், பல நூற்றாண்டுகளாக தர்ப்பணம் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த இடம், மிகவும் தாழ்வாக இருந்ததால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, தர்ப்பணம் செய்யும் இடம், வெள்ளத்தால் சூழப்பட்டு வந்தது. இந்நிலையில், தனியார் அறக்கட்டளை சார்பில், பேரூர் படித்துறையில், அறநிலையத்துறைக்கு சொந்தமான, 5.5 ஏக்கர் இடத்தில், 15 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தர்ப்பண மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புதிய தர்ப்பண மண்டபம் கடந்த, பிப்., 5ம் தேதி, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை, பேரூர் தர்ப்பண மண்டபம், திறப்பு விழா செய்யப்படாமல் உள்ளது. இதனால் இப்போதும், ஆற்றங்கரையில் உள்ள தென்னந்தோப்பிலேயே, பொதுமக்கள், தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். பருவமழை துவங்கும் முன், புதிய தர்ப்பண மண்டபத்தை திறந்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
அமைச்சருக்கு காத்திருப்பு!
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் (பொ) விமலாவிடம் கேட்டபோது, ''தர்ப்பண மண்டப கட்டுமான பணிகள் நிறைவடைந்தன. ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வாயிலாக, இந்த மாத இறுதிக்குள் திறப்பு விழா நடத்தப்படும்,'' என்றார்.