உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏற்கனவே பயிற்சி பெற்ற நாங்கள் இருக்கும்போது பிறருக்கு ஏன் பயிற்சி?

ஏற்கனவே பயிற்சி பெற்ற நாங்கள் இருக்கும்போது பிறருக்கு ஏன் பயிற்சி?

கோவை; அரசு பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் ஹைடெக் ஆய்வகங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க, ஒவ்வொரு பள்ளியிலும் ஒருங்கிணைப்பு ஆசிரியரை நியமிக்க கல்வித்துறை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு, எதிராக தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் குரல் எழுப்பியுள்ளனர்.தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில், ஸ்மார்ட் போர்டு, நடுநிலைப்பள்ளிகளில் உயர்தர லேப் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சரியாக வழிநடத்த தேவையான, ஆலோசனைகளை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் வழங்கியுள்ளது.தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படும் போது, உதவி மையத்தைத் தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வகுப்பறைகளும், ஆய்வகங்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை கண்காணிக்க, ஒவ்வொரு பள்ளியிலும் ஒருங்கிணைப்பு ஆசிரியரை நியமிக்க, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு ஆசிரியர்களுக்காக, கெலட்ரான் நிறுவனத்தின் சார்பில், ஒரு நாள் பயிற்சி முகாமும் நடைபெற உள்ளது.அரசின் இந்த முயற்சிக்கு, தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எங்கள் கோரிக்கை என்னாவது?

தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் கூறுகையில், 'தமிழ்நாடு முழுவதும் 60,000க்கும் மேற்பட்ட, பி.எட்., முடித்த கணினி அறிவியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர். அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் தொடங்கப்பட்டால், எங்கள் உறுப்பினர்கள் அதனை இலவசமாகக் கூட கற்பிக்க தயாராக உள்ளனர்.ஆனால், இப்போது அரசு ஆசிரியர்களுக்குக் கணினி பயிற்சி அளித்து, அவர்களையே ஹைடெக் ஆய்வகங்களில் பணியமர்த்தினால், நீண்ட காலமாக வேலை கேட்டு காத்திருக்கும் எங்களுக்கு என்ன பதில்? எங்களுக்கு தனி பணி நியமனம் வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ