மாநிலத்தில் ஜொலிக்கும் மாணவர்கள்; தேசிய அளவில் பங்கேற்பார்களா?
பொள்ளாச்சி; இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும் மாநில போட்டிகளில் வெல்லும் அரசு பள்ளி மாணவர்கள், தேசிய போட்டிகளில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குழு மற்றும் தடகளப் போட்டிகள், குறுமைய, மாவட்ட, மண்டல போட்டிகளைத் தொடர்ந்து, மாநில அளவிலும் போட்டிகள் நடத்தப்படுகிறது.இப்போட்டியானது, 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளின் கீழ், மாணவ, மாணவியர் என, தனித்தனியாக நடத்தப்படுகிறது. ஆனால், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை பொறுத்தமட்டில், ஒவ்வொரு ஆண்டும், அரசு பள்ளி மாணவர்கள், மாநில போட்டிக்குப் பின், தேசிய போட்டிகளில் பங்கேற்பதை உறுதி செய்ய முடிவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:விளையாட்டில் திறன் வாய்ந்த அரசு பள்ளி மாணவர்கள், மாநில போட்டி வரை முன்னேறி விடுகின்றனர். அவர்கள், தேசிய போட்டிகளில் பங்கேற்பதை உறுதி செய்ய முடியவில்லை. மாநில அளவில் சீனியர் பிரிவு போட்டிகளில் வென்ற ஏதேனும் குறிப்பிட்ட விளையாட்டு அணியினர் மட்டுமே தேசிய போட்டியில் பங்கேற்கின்றனர்.நடப்பு கல்வியாண்டு அந்த நிலையை மாற்ற வேண்டும்.மாநில போட்டிகளில் வெல்லும் அனைத்து வயது பிரிவு மாணவர்களும், தேசிய போட்டிகளில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.