கனிம கொள்ளையை தடுக்க 104 கேமரா ரூ.1.8 கோடியில் அமைக்கும் பணி மும்முரம்
கோவை: கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுக்க, கோவை மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிதியில் இருந்து, 1.8 கோடியில்,104 கேமராக்கள்வாங்கி, பொருத்தும் பணி துவங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் பேரூர், கிணத்துக்கடவு, மதுக்கரை, கோவை வடக்கு ஆகிய தாலுகாக்களில், சில ஆண்டுகளாகவே கனிம வள கொள்ளை நடந்து வருகிறது. அரசியல் பின்புலம் வாய்ந்த சிலர், வெளிப்படையாகவே கனிமங்களை கடத்தி வந்தனர். பெயரளவுக்கு வழக்கு பதிந்து, அபராதம் விதிப்பது, லாரிகளை சிறைபிடிப்பது போன்ற கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டும் எடுக்கப்பட்டு வந்தன. இயற்கை ஆர்வலர்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணையின் போது, அரசு அதிகாரிகள் பலரும் கனிம கொள்ளைக்கு ஆதரவாக இருந்தது தெரியவந்தது. எந்தெந்த இடங்களில் கனிமம் கொள்ளையடிக்கப்பட்டது என்பதை அறிய, மாவட்ட அளவிலான நீதிபதிகள் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, நீதிபதிகள் குழு ஆய்வு செய்து, புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் ஐகோர்ட்டில் அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், செயற்கைக்கோள் உதவியுடன் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பினோம்; நிதியில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கனிம வளம் கொள்ளை அடித்தவர்களிடம் வசூலித்த அபராதத் தொகையில் இருந்து செலவழிக்க கோர்ட் உத்தரவிட்டது. மொத்தம் 104 'சிசி டிவி' வித் ஏ.ஐ., மற்றும் ஆட்டோமேட்டிக் நம்பர் ரீடிங் வித் ஏ.ஐ., கேமராக்கள் வாங்கப்பட்டு, வருவாய்த்துறையினர் மேற்பார்வையில் ரகசியமான இடங்களில் பொருத்தப்படுகின்றன. கனிம வளம் எடுத்துச் செல்லும் வாகனம், பதிவு எண், டிரைவர் மற்றும் கிளீனர், வாகனத்தின் பக்கவாட்டில் எழுதியுள்ள விஷயங்களை நேரம், தேதி உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பதிவாகும். அவற்றை கனிம வளத்துறை அதிகாரிகள் கண்காணிக்கும் வசதியும் செய்யப்படுகிறது. இதுகுறித்து கோவை மாவட்ட கனிம வளத்துறை இணை இயக்குனர் சுரேஷ் கூறுகையில், ''கோவை மாவட்ட கனிம வளத்துறை அறக்கட்டளை நிதியில், 1.8 கோடி ரூபாயில் 104 கேமராக்கள் வாங்கப்பட்டு, பொருத்தும் பணி நடந்து வருகிறது. ''முதல்கட்டமாக, கிணத்துக்கடவு தாலுகாவில் எட்டு இடங்களில் பொருத்தி, கண்காணித்து வருகிறோம். மீதமுள்ள தாலுகாக்களிலும் விரைவில் பொருத்தப்படும்,'' என்றார்.