நகர்ப்புற துணை சுகாதார நிலையம் அமைக்க தொழிலாளர்கள் கோரிக்கை
வால்பாறை; சக்தி - தலநார் எஸ்டேட் பகுதியில், நகர்புற துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை, கவர்க்கல் எஸ்டேட்டில் இருந்து, 12 கி.மீ., தொலைவில் சக்தி - தலநார் எஸ்டேட் அமைந்துள்ளது. இங்குள்ள சக்தி, தலநார், பிளண்டிவேலி, மகாலட்சுமி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட தேயிலை எஸ்டேட்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த இந்த எஸ்டேட் பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், தொழிலாளர்கள், 25 கி.மீ., தொலைவில் உள்ள வால்பாறை நகருக்கு தான் செல்ல வேண்டும்.சாதாரண காய்ச்சல், சளி என்றால் கூட வால்பாறை நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டியுள்ளது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் காய்ச்சல் அதிகளவில் பரவி வரும் நிலையில், தொழிலாளர்கள் சிகிச்சை பெற முடியாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது:சக்தி - தலநார் எஸ்டேட் தொழிலாளர்களின் நலன் கருதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், நகர்ப்புற துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, 13 ஆண்டுளாக மாவட்ட கலெக்டர் முதல் மாநில முதல்வர் வரை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.இந்தப்பகுதியில் மருத்துவமனை இல்லாததால் அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில், சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, தலநார் அரசு துவக்கப்பள்ளி அருகில், நகர்ப்புற துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.