உலக காடுகள் தினம் விழிப்புணர்வு பேரணி
பொள்ளாச்சி; ஊரக வேளாண் அனுபவ பயிற்சிக்காக, கோவை வேளாண் பல்கலை நான்காமாண்டு, மாணவியர், ஆழியாறு பகுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில், உலக காடுகள் தினத்தை முன்னிட்டு அவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.பொள்ளாச்சி வனச்சரகர் ஞானபாலமுருகன் தலைமை வகித்தார். ஆழியாறு பகுதியில் நடந்த பேரணியில், 'மனித வாழ்விற்கு காடுகளே முக்கியம்; காடு சார்ந்த தாவரங்களையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பது அவசியம்,' என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு, மாணவியர் ஊர்வலமாகச் சென்றனர்.தொடர்ந்து, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் வளாகத்தில், ஆலம் விழுது அமைப்புடன் இணைந்து, மரக்கன்று நடும் நிகழ்ச்சியும் நடந்தது. அங்கு, 8 புங்கன் மரக்கன்றுகளை, மாணவியர் நடவு செய்தனர்.