கல்லால் அடித்து வாலிபர் கொலை; டாஸ்மாக் பார் ஊழியர் கைது
சூலுார்; கோவை அருகே டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில், வாலிபரை பார் ஊழியர் கல்லால் அடித்து கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்தவர் கவின் ராஜ்,25. இவர் ஐ.டி.ஐ., படித்து விட்டு, கோவை சூலுார் குரும்பபாளையம் பகுதியில், அறை எடுத்து தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கவின்ராஜ் தனது அறையில் கடந்த 23ம் தேதி இறந்து கிடந்தார். நண்பர்கள் சூலுார் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. உடல்நல குறைவால் இறந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், பிரேத பரிசோதனையில் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டு இறந்ததாக கூறப்பட்டிருந்தது.போலீஸ் விசாரணையில், கவின்ராஜ், கடந்த, 22ம் தேதி, சூலுார் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாருக்கு, மது அருந்த சென்றுள்ளார். சம்பவ இடத்தை சுற்றியுள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, பார் ஊழியரான ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த தர்மர், 27 என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தர்மர், கவின்ராஜை கல்லால் தாக்கியுள்ளார். இதனால், உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த தர்மரை போலீசார் கைது செய்தனர். கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.