மாணவர்களை தாக்கிய ஐ.டி.ஐ.,யில் விழிப்புணர்வு
சிதம்பரம் : சிதம்பரம் அரசு நந்தனார் ஐ.டி.ஐ., மாணவர்களை கஞ்சா வியாபாரிகள் தாக்கிய வீடியோ சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சிதம்பரம் போலீசார் சார்பில் நேற்று ஐ.டி.ஐ.,யில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். இதில், மாணவர்கள், சாலை விதிகளை கடைபிடிப்பது, போதை பொருட்கள் பயன்படுத்தாமல் இருத்தல், பயன்படுத்துபவர்கள் குறித்த தகவல் தெரிவித்தல், ஜாதி பிரச்னைகளில் ஈடுபடாமல் இருப்பது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டு நடப்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஐ.டி.ஐ., முதல்வர் அறிவழகன், பாலகிருஷ்ணன், வீரசோழன், கண்ணதாசன், சரவணகுமார், ரவி, பாலசண்முகம், பிரகாஷ், வெங்கடேசன், செந்தில் முருகன், விஜயகுமார், சச்சிதானந்தம் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.