| ADDED : ஜூன் 13, 2024 12:30 AM
கடலுார் : கடலுார் தாலுகாவில், இரண்டாம் கட்டமாக 125 ரேஷன் கடைகளுக்கு, திருத்தியமைக்கப்பட்ட விற்பனை முனைய இயந்திரம் (பி.ஓ.எஸ்.,) வழங்கப்பட்டது.ரேஷன் கடைகளில் கடந்த 2014ம் ஆண்டு முதல் கை ரேகை பதிவு செய்து, விற்பனை முனைய இயந்திரம் மூலம் பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, புதிய திருத்தியமைக்கப்பட்ட விற்பனை முனையம் (பி.ஓ.எஸ்) மெஷின்கள் கடலுார் மாவட்ட ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.கடலுார் தாலுகாவில் முதற்கட்டமாக கடந்த மாதம் 20 கடைகளுக்கு வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக நேற்று 125 கடைகளுக்கு வழங்கப்பட்டது. கடலுார் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் குடிமைப்பொருள் தாசில்தார் ஜெயக்குமார் வழங்கினார். முதுநிலை ஆய்வாளர் ரம்யா, பி.ஓ.எஸ் மெஷின் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார். வட்ட வழங்கல் பிரிவு அலுவலர்கள் விக்னேஷ்குமார், காளிதாஸ், கூட்டுறவு சார்பதிவாளர்கள் சுகன்யா, வேலாயுதம் பங்கேற்றனர்.