1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால நாணயம் கண்டெடுப்பு
பண்ருட்டி: தென்பெண்ணை ஆற்றங்கரையில், 1000ம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால நாணயம் கண்டெடுக்கப்பட்டது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் தலைமையில் கல்லுாரி மாணவர்கள் வினோத்குமார், தேவா, சாமுவேல், டேவிட் ராஜ்குமார் ஆகியோர் மேற்புர கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு நாணயத்தை மாணவர்கள் கண்டெடுத்து வழங்கினர். அந்த நாணயத்தை சுத்தம் செய்து பார்த்ததில், அது ராஜராஜ சோழன் காலத்து வெள்ளி நாணயம் என தெரிய வந்தது. தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் கூறியதாவது: தென்பெண்ணையாற்றின் கரை பகுதியில் நடந்த கள ஆய்வில், என் தலைமையிலான மாணவர்கள் குழுவினர் கள ஆய்வு செய்தபோது, ஒரு நாணயத்தை கண்டெடுத்தனர். அது, ராஜராஜ சோழன் காலத்து வெள்ளி நாணயம் என தெரிய வந்தது. அந்த நாணயத்தின் எடை, 4.35 கிராம். நாணயத்தின் ஒருபக்கத்தில் தேவநாகரி எழுத்தில், 'ஸ்ரீராஜராஜ' என பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. கடந்த 985 முதல். 1,014 வரை தமிழகத்தில் ஆட்சிபுரிந்த முதலாம் ராஜராஜ சோழன் கால நாணயம் என தெரிய வந்துள்ளது. இந்த நாணயத்தின் ஒரு பக்கம் மலரை கையில் ஏந்தியவாரு ஒருவர் நிற்க, அவரது இடது பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும், கீழே மலரும் உள்ளன. வலது பக்கம் திரிசூலம் விளக்கு உள்ளது. நாணயத்தின் மறுபக்கம் கையில் ஒருவர் சங்கு ஏந்தி அமர்ந்திருக்கிறார். அவரின் இடது கை அருகே தேவநாகரி எழுத்தில், 'ஸ்ரீராஜராஜ' என எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.