செயின் பறித்த 2 பேர் கைது
கடலுார்: கடலுார் அருகே கூழ் விற்கும் மூதாட்டியிடம் செயினை பறித்துச்சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார் அடுத்த புதுக்கடை, மேட்டுப்பாளையத்தைச சேர்ந்தவர் அஞ்சலாட்சி,53. கடந்த 4ம் தேதி விழுப்புரம் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் புதுக்கடை அருகே கூழ் விற்பனை செய்தார். அப்போது பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் மூதாட்டியின் கழுத்திலிருந்து மூன்று சவரன் தங்க செயினை பறித்துச் சென்றனர்.இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் வீடுகளை நோட்டமிட்டு திருடும் கும்பலைச் சேரந்த வேலுார் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்த பேபி,27, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் கொடுத்த தகவலின்பேரில், குடியாத்தம் முனுசாமி மகன் செல்வம்,27; முனியப்பன் மகன் செல்வராஜ்,25, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து, மூன்று சவரன் தங்க செயினை பறிமுதல் செய்தனர்.