கடப்பாரையுடன் சென்று வரி வசூல் 2 மாநகராட்சி ஊழியர்கள் சஸ்பெண்ட்
கடலுார், : கடலுாரில், கடப்பாரையுடன் சென்று வரி வசூல் செய்த இரு மாநகராட்சி ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.கடலுார் மாநகராட்சி சார்பில், தீவிர வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. வரி கட்டாதவர்கள் கடைகள் 'சீல்' வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெண் மற்றும் ஆண் ஊழியர்கள் சென்று, வீட்டின் உரிமையாளர்களிடம் வரி கட்டுமாறு, கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளனர்.கட்டவில்லை என்றால் கடப்பாரையால், வீட்டு படிக்கட்டுகளை இடிப்போம் என, கடப்பாரையை காண்பித்து மிரட்டியுள்ளனர்.மாநகராட்சி ஊழியர்கள் மிரட்டும் தொனியில் பேசுவதும், அதற்கு வீட்டின் உரிமையாளர்கள் கெஞ்சுவதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.அதையடுத்து கடப்பாரையுடன் சென்ற பில் கலெக்டர்கள் சுசீலா, மகேஷ் ஆகிய இருவரை, சஸ்பெண்ட் செய்து கமிஷனர் அனு உத்தரவிட்டார்.இது குறித்து கமிஷனர் கூறுகையில், ''கடலுார் மாநகரில் சொத்து வரி நிலுவை கூடுதலாக உள்ளது. கடை வாடகை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே உயர்த்தப்பட்டது குறித்து கடை உரிமையாளர்கள் முறையிட்டனர். அதற்காக அவர்களிடம் நடப்பு ஆண்டின் வரியையாவது முறையாக செலுத்துங்கள். உயர்த்தப்பட்ட வரியை சிறிது சிறிதாக செலுத்தலாம் என கூறினேன். ஓரளவு வரி வசூல் செய்தால்தான் மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற முடியும். அதற்காக கடப்பாரையுடன் சென்று வரி வசூலில் ஈடுபட கூறவில்லை'' என்றார்.