| ADDED : மார் 05, 2026 06:44 AM
கடலுார்: தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள தற்காலிகமான ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்ட தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் பல்நோக்கு பணியாளர்களுக்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பணிநியமன ஆணையினை வழங்கினார். இது குறித்து அவர் கூறியதாவது: 16வது தேசிய கணக்கெடுப்பானது 2027ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியாகும். இந்த கணக்கெடுப்பின் மூலம் மக்களின் எண்ணிக்கை, வீடமைப்பு, கல்வித்தரம், தொழில், இடம்பெயர்வு மற்றும் சமூக, பொருளாதார நிலை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. கணக்கெடுப்பாளர்கள் ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று தகவல்களை டிஜிட்டல் சாதனங்கள் மூலம் பதிவு செய்வார்கள். சேகரிக்கப்படும் தகவல்கள் அரசு நலத்திட்டங்கள், அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் வளங்கள் பகிர்வு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும். மக்கள் அளிக்கும் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். இது அங்கீகாரம் பெற்ற பகுதி அமைப்பு மற்றும் மக்கள்தொகை கணக்கெடு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், 2027ம் ஆண்டு கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்படவுள்ளது. ஸ்மார்ட் போன் செயலி மற்றும் இணையத்தளம் வழியாக தரவுகள் சேகரிக்கப்படும். மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கு 39 தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் 2 பல்நோக்கு பணியாளர்கள் ஆகியோர் வெளிமுகமை மூலம் முற்றிலும் தற்காலிகமான ஒப்பந்த முறையில் கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் போன்ற அலுவலகங்களின் தலைமை இடத்தில் பணிபுரிய கல்வித் தகுதியின் அடிப்படையில் பணியாளர்களை தேசிய ஊரக,நகர்புற வாழ்வாதார இயக்கம், திட்ட இயக்குநர் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்றைய தினம் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.