உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆபத்தை அறியாமல் குளிக்கும் சிறுவர்கள் விபத்தை தடுக்க விழிப்புணர்வு தேவை

ஆபத்தை அறியாமல் குளிக்கும் சிறுவர்கள் விபத்தை தடுக்க விழிப்புணர்வு தேவை

கடலுார் : கடலுாரில் ஆபத்தை உணராமல் உரிய பாதுகாப்பின்றி, நீர்நிலைகளில் குளிக்கும் சிறுவர்களுக்கு வீடு மற்றும் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோடை விடுமுறை காரணமாக, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் சிறுவர்கள் நீர்நிலைகளில் ஆழம் தெரியாமல், ஆபத்தை உணராமல் குளிக்கின்றனர். சிலருக்கு நீச்சல் தெரியாவிட்டாலும், உரிய பாதுகாப்பின்றி தண்ணீரில் குதுாகலமாக குளிக்கின்றனர். இதனால் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுகிறது. அரசு எச்சரித்தும், பாதிப்பு ஏற்படும் வரை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுவது குறைவாகவே உள்ளது.கடலுார் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி, காட்டுமன்னார்கோவில் அடுத்த வடக்கு கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் வெள்ளியாங்கால் ஓடையில் குளித்த போது நீரில் மூழ்கி இறந்தனர். கடந்த 12ம் தேதி, வேப்பூர் அடுத்த சிறுநெசலுாரில் குளத்தில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்தான். சிறுவர்கள் முதல் பெரியவர் வரை ஆபத்தை உணராமல், நீர்நிலைகளில் குளிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. ஏரி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகளில் ஆழம் உள்ள இடம் தெரியாமல் ஆழத்தில் சிக்கிக் கொள்ளக் கூடிய நிலை உள்ளது. எனவே, சிறுவர்களை ஆழமான நீர்நிலைகளுக்கு செல்லாமல் தடுக்க வீடு மற்றும் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆபத்தான நீர்நிலைகளில் எச்சரிக்கை பலகை வைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ