சரியான திட்டமிடல் இல்லாமல் கேபிள் பதிப்பு: கடலுாரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
கடலுார்: சரியான திட்டமிடல் இல்லாமல் கடலுாரில் கேபிள் போடுவதற்காக பள்ளம் தோண்டும்போது பல இடங்களில் பிரதான பைப்பு உடைந்து தண்ணீர் வெளியேறியதால் 2வது நாளாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. கடலுார் மஞ்சக்குப்பம் சண்முகம் தெருவில் கேபிள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலையை தோண்டாமல் நவீன இயந்திரம் மூலம் துளையிட்டு கேபிள் பதிக்கப்படுகிறது. இதற்காக சில இடைவெளியில் ஆங்காங்கே 3 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டப்படுகிறது. பூமிக்கடியில் குடிநீர் குழாய் செல்வது தெரிந்திருந்தும் அதை பொருட்படுத்தாமல் பள்ளம் தோண்டியதால் பிரதான பைப்பு உடைந்து குடிநீர் வெள்ளமென வெளியேறியது.கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதேத் தெருவில் பள்ளம் தோண்டும்போது, குடிநீர் பைப் உடைந்து தண்ணீர் வெளியேறியதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். இதே பிரச்னையால் நேற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்பகுதியில் இதற்கு முன்பு ஒரு நாள் மின்சாரம் இல்லாததால் குடிநீர் வழங்கப்படவில்லை. அது தவிர கம்மியம்பேட்டையில் குடிநீர் குழாயில் 'லீக்' இருந்ததால் ஒரு நாள் குடிநீர் சப்ளை இல்லை. இப்படி ஒரே வாரத்தில் 4 நாட்கள் இதுபோன்ற காரணங்களால் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி இந்த குடிநீருக்காக கொள்ளிடம் ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தில் அதிகளவு மின்சாரம் செலவு செய்து எடுத்து கடலுார் மாநகர மக்களுக்கு விநியோகம் செய்கிறது.இப்படி அதிகளவு செலவு செய்து கொண்டு வரப்படும் குடிநீரை பயன்படுத்தாமல் அலட்சியப்படுத்துவதால் பொதுவெளியில் குடிநீர் வெள்ளமென பாய்ந்து தேங்கி நிற்கிறது. எனவே குடிநீர் குழாய் உடைப்பு இல்லாமல் கேபிள் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.