உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடல் சீற்றத்தால் கடலோர கிராமங்கள் கடும்...பாதிப்பு: அரசு நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை

கடல் சீற்றத்தால் கடலோர கிராமங்கள் கடும்...பாதிப்பு: அரசு நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை

கடலுார்: கடல் அலையின் சீற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடற்கரையோர கிராமங்கள் மணல் பரப்பை இழந்து வருகின்றன. உலகிலேயே 2வது நீண்ட கடற்கரை உள்ள நகரம் சென்னை. தமிழகத்தில் பல இடங்களில் கடற்கரை நீண்ட, அகலமும் கொண்டவையாக உள்ளன. அதனால் பல கடற்கரை நீலக்கொடி சான்றிதழ் பெற முயற்சி செய்து வருகின்றன. கடல் சீற்றம் சமீப காலமாக வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதால், கடலுார் மாவட்டத்தில் பல கடற்கரை கிராமங்களில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடற்கரையில் மணற்பரப்பை காண முடியாத நிலை உள்ளது. மீனவ கிராமத்தினர் தங்கள் கிராமத்தையொட்டிய கடற்பகுதிகளில் படகுகளை நிறுத்தி வந்த நிலையில், தற்போது படகுகள் நிறுத்த கூட இடமின்றி, கடற்கரையை கடல் உள்வாங்கி வருகிறது. பருவமழையின்போது உருவாகிய புயல் சின்னம் காரணமாக, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டு, அலைகள் ஆர்ப்பரித்ததால், கடலுார் சில்வர் பீச் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் மண் மேடுகள் காணாமல் போனது. அப்போது, கடலுார் துறைமுகம் அருகே சோனாங்குப்பத்தையொட்டி, சில்வர் பீச் வரையில் கடற்கரையோரம் கருங்கல் கொட்டுவதற்காக, கனரக வாகனங்கள் செல்வதற்காக அமைக்கப்பட்ட சாலை சேதமானது. கடல் அரிப்பை தடுப்பதற்காக தாழங்குடா, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் கடலோரப்பகுதியில் கருங்கற்கள் கொட்டி ஓரளவுக்கு அலையின் வேகம் தடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கற்கள் கொட்டாத கிராமங்களில் அதிகளவு கடல் சீற்றத்தால் மணற்பரப்பு மாயமாகி வருகிறது. கடலுார் அருகே உள்ள சுப உப்பலவாடி கிராம கடற்கரை பகுதியில், 200 அடிக்கு மேல் மணற்பரப்பு இருந்தது. தற்போது சுருங்கி அரசு சார்பில் போடப்பட்ட தார் சாலையை கூட கடல் அலை இழுத்து சென்றுவிட்டது. 30 அடி அளவிற்கு அலைகள் கரையில் சீறி பாய்ந்து வருகிறது. வனத்துறை சார்பில் கடல் நீர் ஊருக்குள் புகாத வகையில் வைக்கப்பட்டிருந்த சவுக்கு தோப்புகளும் கிராம மக்களுக்கு பலனளிக்க வில்லை. கிராமத்தையொட்டி மண் மேடுகளும் அலையில் அடித்துச்செல்லப்பட்டதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடற்கரையோர மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க மீண்டும் கற்களை கொட்டி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கடலோரப் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்க 'விரிவான கடற்கரை பாதுகாப்பு மேலாண்மை திட்டம்' விரைந்து செயல்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ