பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி; ஆசிரியர்களுக்கு கலெக்டர் ஆலோசனை
கடலுார் : கடலுார் மாவட்டத்தில், அரசு பொதுதேர்வில் நுாறு சதவீத தேர்ச்சிக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கேட்டுக்கொண்டார்.கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவது குறித்து ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. நல்லுார், மங்களூர், விருத்தாசலம், கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்டார அளவிலான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:அரசு பொதுத் தேர்வு, மாணவர்களின் கல்வியின் தரத்தை பரிசோதிக்கவும் மற்றும் மேம்படுத்துவதற்கான தேர்வு ஆகும். இதனை மாணவர்கள் எவ்வித தயக்கமுமின்றி முழுத்திறனுடன் எதிர்கொள்வதற்கு ஆசிரியர்களின் பங்கு அளப்பறியதாகும். மாணவர்களின் திறனை கண்டறிந்து முன்னேற்ற பாதையில் அழைத்துச்செல்வது முக்கிய பொறுப்பாகும்.மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, பின்தங்கிய மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி வகுப்பு, மாணவர்களின் உடல்நலன் குறித்து அறிந்து பயிற்றுவித்தல், குடும்ப சூழ்நிலையறிந்து பயில்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தருதல் வேண்டும். மாணவர்களுக்கு ஊக்கப்பயிற்சி அளித்து தன்முனைப்புடன் கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தொடர்ச்சியாக அவர்களுக்கு மீளாய்வுக்கூட்டம் நடத்தி தேவைகளை பூர்த்தி செய்திட வேண்டும் என கலெக்டர் கூறினார்.கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், மாவட்ட கல்வி அலுவலர்கள் துரைப்பாண்டி, ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.