ரயில்வே கேட் கீப்பர் மீது புகார்: கடலுாரில் அதிகாரிகள் விசாரணை
கடலுார்: கடலுார் கம்மியம்பேட்டை ரயில்வே கேட் கீப்பர் போதையில் இருந்ததாக எழுந்த புகாரையடுத்து, நேற்று ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கடலுார் அருகே செம்மங்குப்பத்தில் கடந்த ஜூலை மாதம் ரயில்வே கேட் திறந்து கிடந்ததால் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் ரயில்வே கேட் கீப்பர் முறையாக பணி செய்கிறாரா என விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கடலுார் கம்மியம்பேட்டை ரயில்வே கேட் கீப்பராக உள்ள செல்வகுமார் 40; என்பவர், கடந்த 24ம் தேதி பணியின்போது குடிபோதையில் இருந்ததாகவும், அதனால் ரயில்கள் வரும்போது சரி வர கேட் மூடுவதும், திறப்பதும் இல்லையென அப்பகுதி மக்கள் திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். அதையடுத்து, நேற்று அவரை திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு வரவழைத்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் கேட் கீப்பர் குடிபோதையில் இருந்தாரா என்பது குறித்து அவரது உடலில் இருந்து ரத்த மாதிரி எடுத்து பரிசோனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.